கார்த்தி சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு! வெளிநாடு செல்லவும் முடியாது!!
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீட்டுக்கான அனுமதி விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றார் என்பது சிபிஐ குற்றச்சாட்டு. இது தொடர்பான விசாரணைக்கு அழைத்தும் கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை.
இதனால் தேடப்படும் நபர் என்கிற லுக் அவுட் நோட்டீஸை சிபிஐ பிறப்பித்தது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை பெற்றார் கார்த்தி. அத்துடன் வரும் 16-ந் தேதி வெளிநாடு செல்லவும் கார்த்தி சிதம்பரத்தை சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்தது.
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான பெஞ்ச் இன்று இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி கேஹர் கூறியதாவது:
ஒருமுறை கூட..
விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றுதான் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கேட்டிருக்கிறது. ஆனால் கார்த்தி சிதம்பரம் ஒருமுறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை.
கைது செய்திருக்கவும் முடியும்
இதற்கான காரணம் என்ன? கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை முடக்கி அவரை சிபிஐ கைது செய்திருக்கலாம். ஆனால் சிபிஐ அப்படி செய்யவில்லை.
எப்படி சொல்வது?
கட்டாயம் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் செல்ல வேண்டும். ஒரு விசாரணைக்கு நான் செல்ல மாட்டேன் என்று இந்த நாட்டின் குடிமகன் எப்படி சொல்ல முடியும்?
தப்பி ஓடுகிறார்கள்
வழக்கு விசாரணைகளில் சிக்கியவர்களை வெளிநாடு செல்ல அனுமதித்த விவகாரத்தில் இந்த நீதிமன்றத்துக்கு மோசமான அனுபவங்கள் இருக்கின்றன. அப்படி வெளிநாடுகளுக்கு செல்கிறவர்கள் திரும்பி வருவதும் இல்லை.
பிரச்சனை என்ன?
கார்த்தி சிதம்பரம் மீது தவறு இருக்கிறதா? இல்லையா? என்பது பிரச்சனை அல்ல. விசாரணைக்கு ஆஜரானாரா? இல்லையா? என்பதுதான் விவகாரம்.
ஆஜராகனும்
கார்த்தி சிதம்பரம் விசாரணைகளுக்கு ஆஜரானாரா? இதற்கு பதில் இல்லை என்பதுதான். சிபிஐ விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராக வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.
வெளிநாடு செல்ல முடியாது
மேலும் லுக் அவுட் நோட்டீஸ் மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்கியது உச்சநீதிமன்றம். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதுவரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல முடியாது.