கச்சத்தீவை மீட்க கருணாநிதி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க 4 வார கூடுதல் அவகாசம்!
டெல்லி: கச்சத்தீவை மீட்க உத்தரவிடக் கோரி திமுக தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்க மத்திய அரசுக்கு கூடுதலாக 4 வாரங்கள் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கியது.
சில மாதங்களுக்கு முன்பு கருணாநிதி தாக்கல் செய்த மனுவில், கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்கும் ஒப்பந்தங்கள் 1974, 1976 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. அதை ரத்து செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதால், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு செல்லவும், அதையொட்டிய கடல் பகுதியில் மீன்பிடிக்கவும் இலங்கை கடற்படை உரிமை மறுக்கிறது. எனவே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு கடந்த அக்டோபர் மாதம் உ-ச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் பதில் அளிக்க 6 வாரங்கள் அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில், இம் மனு நீதிபதிகள் பி.எஸ். சௌஹான், எஸ்.ஏ. பாப்டே அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வழக்கறிஞர் விடுதலை ஆஜரானார். அதைத் தொடர்ந்து, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் வைத்தியநாதன், பதில் அளிக்க கூடுதலாக 4 வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதில் அளிக்க 4 வாரங்கள் அவகாசம் அளித்து விசாரணையை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.