வழக்கை இழுத்தடிக்க ஜெ. எதையும் செய்வார்: அப்பீல் மனு மீதான விசாரணையில் ஆச்சார்யா அதிரடி
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதையும் செய்வார் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா சுட்டிக்காட்டினார்.
வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்து குவித்தது நிரூபிக்கப்பட்டதால் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார் பெங்களூர் விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹா. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 2-ந் தேதி தொடங்க இருந்தது. ஆனால் இதை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான பினாக்கி சந்திரகோஷ், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடர்பான வழக்கை விசாரிப்பதால் ஜெயலலிதா தரப்பு வழக்கை ஒத்திவைக்க கோரியது. இதை ஏற்று பிப்ரவரி 23-ந் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
பிப்ரவரி 23-ந் தேதியன்றும் ஜெயலலிதா தரப்பு மேலும் ஒரு வார காலம் ஒத்திவைக்க அவகாசம் கோரியது. ஆனால் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் அடங்கிய பெஞ்ச் இக்கோரிக்கையை நிராகரித்து கர்நாடகா அரசு தரப்பு இறுதிவாதத்தை முன்வைக்க அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது இறுதிவாதங்களை முன்வைத்தார். அவர் 2-வது நாள் வாதத்தை நிறைவு செய்த போது, இவ்வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மார்ச் 10-ந் தேதியன்று நடைபெற்ற விசாரணையில் தவே, தம்முடைய இறுதிவாதத்தை நிறைவு செய்தார். தவே தம்முடைய வாதத்தில் பெங்களூரு விசாரணை நீதிமன்றம் (நீதிபதி குன்ஹா) வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவிக்கப்பட்டது எப்படி என்பதை விரிவாக தம்முடைய தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றமோ (நீதிபதி குமாரசாமி) கண்ணைமூடிக் கொண்டு அந்த தீர்ப்பை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பதை கூட தெரிவிக்காமல் ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துகளை பிழையாக மதிப்பிட்டு விடுதலை செய்திருக்கிறார் என விவரித்திருந்தார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை இன்றைய தேதிக்கு வைக்கப்பட்டது.
ஆஜரானார் ஆச்சார்யா
இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்களுக்கு எதிராக கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அவர் தம்முடைய வாதத்தின் தொடக்கத்திலேயே, இந்த வழக்கை இழுத்தடிப்பதற்காக எதையும் ஜெயலலிதா செய்வார். அவர் 2 முறை முதல்வராக இருந்த காலத்தில் சொத்து குவிப்பு வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. சொத்து குவிப்பு வழக்கில் 76 பேர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஆச்சார்யா முன்வைத்த வாதம்:
இந்த வழக்கின் கீழ்நீதிமன்ற விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் அவருக்கு ரூ1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் இருந்தே இந்த வழக்கை நடத்துவதில் ஜெயலலிதா ஆர்வம்காட்டவில்லை என்பது வெளிப்படும்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் கர்நாடகா அரசு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை நடத்தியது. ஆகையால் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்வதை ஜெயலலிதா தரப்பு கேள்விக்குள்ளாக்க முடியாது. இது வழக்கை இழுத்தடிப்பதற்காகத்தான்.
பெங்களூர் கீழ் நீதிமன்றம் சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு எதிரான ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான வாதங்களை முன்வைக்க கர்நாடகா அரசு தரப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கர்நாடகா அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தை முறையாக பரிசீலித்திருந்தால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கணக்குப் பிழையே ஏற்பட்டிருக்காது.
கீழ்நீதிமன்றம் ஜெ. உள்ளிட்டோருக்கு தண்டனை விதித்து அளித்த முறையான தீர்ப்பை எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாமல் கர்நாடகா உயர்நீதிமன்றம் மாற்றியிருக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக ரூ1 கோடி சொத்து முறைகேடாக குவிக்கப்பட்டிருந்தாலும் அது முறைகேடானதுதான். கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்த வழக்கின் போக்கே மாறிவிட்டது.