ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரிக்க கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
வெளிநாடு வாழ் தொழிலதிபரான சிவசங்கரனின் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே ஏர்செல் நிறுவனத்தில் ரூ4,000 கோடியை முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதலை 2005ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம் கோரியிருந்தது. ஒப்புதல் தர வேண்டிய இந்த வாரியத்துக்கு நிதி அமைச்சர்தான் தலைவர். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம்.
மேக்சிஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று உடனே சிதம்பரம் ஒப்புதல் தரவில்லை. மேக்சிஸ் நிறுவனத்தின் ஒப்புதல் கோரும் மனு நிலுவையில் இருந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் திடீரென சில நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு கைமாறின.
பின்னர் 2006ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம் முதலீட்டுக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்த நிலையில் இந்த பங்குகளும் பெருந்தொகைக்கு விற்பனையாகின. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது சுப்பிரமணியன் சுவாமியின் புகார்.
இது தொடர்பாக சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவர் மனுவையும் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.