காவிரி பங்கீட்டுக்கான திட்டத்தை மே 3-க்குள் வகுக்க வேண்டும்-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Recommended Video
டெல்லி: காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மே 3-க்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பை அளித்தது. இந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சொல்லி வந்தது. ஆனால் மத்திய அரசும், கர்நாடகாவும் உச்சநீதிமன்றம் சொன்னது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஸ்கீம் தான் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக சொல்லி வருகின்றன.
இந்நிலையில் மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தவில்லை என்று மார்ச் 31ம் தேதி மத்திய கேபினட் செயலாளர் மற்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனிடையே இறுதித்தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மார்ச் 31ம் தேதி மனு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் விதித்த காலக் கெடுவுக்குள் மத்திய அரசு வாரியத்தை அமைக்கவில்லை என்று புதுச்சேரி கொறடா மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கம் கேட்டும் தாக்கல் செய்யப்பட்ட மனு உள்ளிட்டவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மே 3ம் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவது கட்டாயம். இரு மாநிலங்கள் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை மே 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். வரைவு செயல்திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து மத்திய அரசு எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.