சிகரெட், பீடி விற்பனையை முற்றிலும் தடை செய்யலாமா? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: நாடு முழுவதும், சிகரெட், பீடி விற்பனையை தடை செய்வது குறித்த முடிவை தெரிவிக்குமாறு, மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிகரெட், பீடியை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து திரைப்பட துறையை சேர்ந்த சுனில்ராஜ்பால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான, வக்கீல் ஆதித்ய அகர்வால் வாதிடுகையில், புகையிலை பொருட்கள் தொடர்பான வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க அரசு ஆண்டுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடியை செலவிடுகிறது. எனவே சிகரெட் வரி மூலமாக அரசுக்கு அதிக நிதி கிடைப்பதாக காரணம் காட்டிக்கொண்டிருக்க முடியாது. ஆண்டுதோறும் உலக அளவில் புகையிலை பொருட்களால் 60 லட்சம் பேர் உயிரைவிடுகிறார்கள் என்று வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதிலும் சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்களை தடை செய்வது குறித்த மத்திய அரசின் கருத்தையும், மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் கருத்தையும் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் புகைக்க கூடாது என்ற உத்தரவு ஆறு வருடங்கள் முன்பே பிறப்பிக்கப்பட்டபோதிலும், இதுவரை அந்த நடைமுறையை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை. கல்வி நிறுவனங்களின் 100 மீட்டர் சுற்றளவுக்குள் சிகரெட் பிடிக்க கூடாது, 18 வயதுக்குட்பட்டோருக்கு சிகரெட் விற்பனை செய்ய கூடாது என்ற உத்தரவுகளும் மீறப்படுகின்றன.
இந்நிலையில், சிகரெட் விற்பனையை ஒட்டுமொத்தமாக தடை செய்ய அரசுகளின் கருத்தை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications