ஜெ. வழக்கு விசாரணையை 4 வாரத்தில் முடிக்கும் சுப்ரீம் கோர்ட்- வேட்புமனு தாக்கலுக்கு முன் "ரிசல்ட்"?
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடகா அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 4 வாரங்களில் முடித்து தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாகவே இந்த வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்தார். இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார். இதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தவே இறுதிவாதம்
இந்த வழக்கில் கடந்த 2 நாட்களாக கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது இறுதி வாதத்தை முன்வைத்து வருகிறார். அவரது வாதம் நாளையுடன் முடிவடைகிறது. பின்னர் அன்பழகன் தரப்பும் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பும் வாதங்களை முன்வைக்க உள்ளது.

நீதிபதிகள் கண்டிப்பு
இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடங்கிய போதே ஏதேனும் காரணங்களை கூறி விசாரணையை தவிர்க்கக் கூடாது என்று அனைத்துத் தரப்புக்கும் அறிவுறுத்தியிருந்தனர் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வாராய். அத்துடன் வழக்கை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கக் கோரிய ஜெயலலிதாவின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்திருந்தனர்.

4 வாரத்துக்குள்....
இந்த வழக்கை அதிகபட்சம் 4 வாரங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிவிடும். அதனைத் தொடர்ந்து பிரசாரம் களைகட்ட, வேட்புமனுத் தாக்கல் நடைமுறைகள் தொடங்கும்.

வேட்புமனு தாக்கலுக்கு முன்னரே ரிசல்ட்
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய முடிவின்படி அனேகமாக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக ஜெயலலிதாவின் விடுதலை செல்லுமா? செல்லாதா? என்ற இறுதித் தீர்ப்பு வந்துவிடும் என தெரிகிறது.
ஜெயலலிதாவை விடுதலை செய்த குமாரசாமி தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து குன்ஹா தீர்ப்பின்படி சிறைத் தண்டனை செல்லும் என தீர்ப்பளித்தால் ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிடும். சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இது தமிழக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் தமிழக அரசியல்தலைவர்கள்.












Click it and Unblock the Notifications