கருப்பு பண இந்தியர்கள் முழு லிஸ்ட்- இன்றைக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவரது பெயர்களையும் இன்றைக்குள் அளிக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

8 பேரின் பெயர்கள் தாக்கல்:
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் 8 பேரின் பெயர்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.

மத்திய அரசின் லிஸ்ட்:
அதில், டாபர் இந்தியா நிறுவனர்களில் ஒருவரான பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்குத் தரகர் பங்கஜ் சிமன்லால் லோடியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ சுரங்க நிறுவனம் உள்பட 8 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்திய அரசிற்கு பிரச்சினை:
மேலும், வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ள கணக்குகள் அனைத்தும் சட்டவிரோதமானவை அல்ல. அந்த விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டால், அதுதொடர்பாக வெளிநாடுகளுடன் இந்திய அரசு ஒப்பந்தங்கள் செய்வதற்கு பிரச்னைகள் ஏற்படும்.

உத்தரவில் திருத்தம் தேவை:
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

உச்ச நீதிமன்ற அமர்வுக் குழு:
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், மதன் பி லோக்குர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

மத்திய அரசின் பாதுகாப்பு:
அப்போது, " வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களை மத்திய அரசு ஏன் பாதுகாக்க முயற்சிக்கிறது? அத்தகைய நபர்களுக்கு, மத்திய அரசு ஏன் பாதுகாப்புக் கவசத்தை அளிக்கிறது?

திருத்தம் செய்ய முடியாது:
கருப்புப் பணம் தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்தது. அதைத் திருத்தம் செய்ய வேண்டும் என்று, புதிய அரசு கோர முடியாது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்காது. அந்த உத்தரவில் சிறிய வார்த்தையைக்கூட உச்ச நீதிமன்றம் திருத்தம் செய்யாது.

பணம் மீட்கப்படாது:
கருப்புப் பணத்தை மீட்டு வரும் பொறுப்பை மத்திய அரசிடம் எங்களால் வழங்க முடியாது. அப்படி வழங்கினால், நமது காலத்துக்குள் அந்தப் பணம் மீட்கப்படாது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏன் நீங்கள் பாதுகாப்பு அரணாக இருக்கிறீர்கள்?

சிறப்பு புலனாய்வுக் குழு:
வெளிநாட்டு வங்கிகளில் கணக்குத் தொடங்கியுள்ளவர்களின் விவரங்களை வெளியிடுவது தனிப்பட்ட நபரின் ரகசியத்தில் தலையிடுவது போன்றது என்ற அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் நலன்கள் மீது நீங்கள் அக்கறைப்பட வேண்டாம். அதை சிறப்பு புலனாய்வுக் குழு கவனித்துக் கொள்ளும்.

இன்று தாக்கல் செய்ய வேண்டும்:
எனவே, அனைவரது பெயர்களையும் இன்றைக்குள் ரகசிய உறைக்குள் வைத்து உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு அளிக்க வேண்டும். அப்போது ஓரிரண்டு பெயர்களை மட்டும் அரசு அளிக்கக் கூடாது. வெளிநாடுகள் அளித்துள்ள அனைத்துப் பெயர்களையும் அளிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications