ஐபிஎல் பிக்சிங் பற்றி விசாரிக்க 3 நபர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீகார் கிரிக்கெட் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஐபிஎல் முறைகேட்டில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால் அவர் தலைவர் பதவி வகிக்க தடை கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சீனிவாசன் தலைவரானாலும் ஐபிஎல் விவகாரங்களில் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாகவும் விமர்சித்திருந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐபிஎல் பிக்சிங் முறைகேடு தொடர்பாக பஞ்சாப், ஹரியானா நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல் தலைமையில், நிலேஷ் தத்தா, நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய மூவர் குழு அமைக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக நாளைக்குள் பதிலளிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பீகார் கிரிக்கெட் சங்கத்துக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications