2ஜி வழக்கு: பார்தி மிட்டல், ரவிகாந்த் ரூயாவுக்கு எதிரான சம்மனை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பார்தி மிட்டல் மற்றும் எஸ்ஸார் குழும நிர்வாகி ரவி ரூயா ஆகியோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த சம்மன்களை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கடந்த டிசம்பரில் முன்னாள் தொலைத்தொடர்பு நிர்வாகியாக இருந்த ஷியாமள் கோஷ் மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஷியாமள் கோஷ், சுனில் மிட்டல், ரவி ரூயா ஆகியோர் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பார்தி ஏர்டெல், வோடோபோனின் அப்போதைய பிரிவான ஹட்ச் மற்றும் ஸ்டெர்லிங் ஆகிய கம்பெனிகளுக்கு சாதகமாக தொலைத்தொடர்பு உரிமங்களைப் பெற்றதாகவும், அதனால் அரசுக்கு ரூ.846 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி சம்மன் அனுப்பியிருந்தார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுனில் மிட்டல் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், சி.பி.ஐ., ஏற்கனவே தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் என் பெயர் இடம் பெறவில்லை. இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி எனக்கு சம்மன் அனுப்புவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுனில் பார்தி மிட்டல் மற்றும் ரவி ரூயாவை ஆஜராகக் கோரி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.