ரூபாய் நோட்டு வழக்குகள்- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்- மத்திய அரசுக்கு நோட்டீஸ்
ரூபாய் நோட்டு தொடர்பான வழக்குகள் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டுகள் தொடர்பான அனைத்து வழக்குகளுடம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு 6 வாரத்துக்குள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார். இதையடுத்து மக்களிடத்தில் பணத் தட்டுப்பாட்டு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து நாடு முழுவதும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு நாடியது.
மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் ரூபாய் நோட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ரூபாய் நோட்டு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்குகள் அனைத்தும் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக 9 கேள்விகளை எழுப்பியுள்ள நீதிபதிகள், இது தொடர்பாக அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டனர்.
அத்துடன் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.