ஹெலிகாப்டர் பேர ஊழல்: சோனியா- மன்மோகன்சிங் மீது வழக்கு தொடரக் கோரிய மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி
டெல்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக சோனியா, மன்மோகன் சிங் மீது வழக்கு தொடரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண் நிறுவனத்தில் இருந்து விமானப்படைக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதையடுத்து இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி தியாகி மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இவ்வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மாகன்சிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர், நீதிபதிகள் ஆர்.பானுமதி, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது சோனியா, மன்மோகன்சிங் மீது வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட முடியாது என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.