தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
டெல்லி: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் விசாரணைக்கு ஏற்று கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள மனுக்களுக்கு தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி 8 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் புரட்சியினால் தமிழக அரசு 3 நாட்களில் ஜல்லிக்கட்டு சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியது.
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு எதிராக கியூப்பா என்ற விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதேபோல தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தை அணுகி, ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்தனர். தமிழக அரசு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கேவியட் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து அனைத்து மனுக்கள் மீதும் ஜனவரி 31ம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் இன்று மாலை வழக்கு விசாரணைக்கு வந்தது.

போராட்டம்
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் கடந்த 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது அதைப் பற்றி பேசவே கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அதனை மீறி தமிழகத்தில் எவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டது.

மத்திய அரசுக்கு அனுமதி
ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த சட்ட ரீதியான பதில்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு வெளியி்ட்ட அறிவிக்கையை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் விளக்கம்
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் இன்னும் இரு நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டுவரப்பட்ட வழிமுறைகள் குறித்து அரசு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.

தடை விதிக்க மறுப்பு
ஜல்லிக்கட்டு சட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்வியை விலங்குகள் நல வாரியத்திடம் நீதிமன்றம் எழுப்பியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications