சந்தித்தவர் பற்றி செய்தி வெளியிட கூடாது: சி.பி.ஐ. இயக்குநர் கோரிக்கை நிராகரிப்பு-சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: தான் சந்தித்தவர்கள் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா மீது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அம் மனுவில் அவர், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தினரை சி.பி.ஐ. இயக்குனர் சந்தித்து பேசியுள்ளார். சுமார் 50 முறை இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையை பாதிப்பதாகவும், திசை திருப்புவதாகவும் உள்ளது என்று கூறி இருந்தார்.
ரஞ்சித் சின்காவின் சந்திப்புகளுக்கான ஆதாரங்களையும் பிரசாந்த் பூசன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை முதலில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா மறுத்தார்.
பிறகு நேற்று அவர் ரிலையன்ஸ் அதிகாரிகளை சந்தித்தது உண்மைதான். ஆனால் 50 முறை சந்திக்கவில்லை. ஓரிரு முறை சந்தித்து பேசி இருப்பேன். இதற்காக நான் அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு எந்தவித சலுகையும் காட்டவில்லை என்றார்.
இதற்கிடையே ரஞ்சித் சின்கா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. எனவே என்னை தினமும் சந்தித்துப் பேசியவர்கள் பற்றிய டைரி குறிப்புகளை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
ஆனால் உச்சநீதிமன்றம் அவரது இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. ரஞ்சித் சின்காவை சந்தித்தவர்கள் பற்றி பத்திரிகைகள் செய்தி வெளியிடலாம் என்று கூறிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் பத்திரிகைகள் செய்தி வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.