சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதியின் ஓய்வுக்கு தடை கோரி ஜெ. மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு!
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி இம்மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். ஆனால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி அவரே வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் தொடர்ந்து மனுக்கள் போடப்படுவதால் தொடர்ந்து 17 ஆண்டுகளாக வழக்கு தள்ளிப்போவதாக வாதிட்டார். நீதிபதி பதவி காலத்தை நீட்டிக்க கூடாது என்றும் அரசு வழக்கறிஞர் பவானிசிங் தொடரக்கூடாது என்றும் தெரிவித்தார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு முடியும் நிலையில் நீதிபதியையும், வழக்கறிஞரையும் மாற்றினால் மீண்டும் விசாரணை தாமதப்படும் என்று கூறினார்.
மேலும் நீதிபதியின் பதவிகாலத்தை நீட்டிக்க கர்நாடக அரசின் சட்டத்தில் இடம் உள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.