ஆர்.டி.ஐ.-ன் கீழ் அரசியல் கட்சிகள்..... மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டு வருவது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் 6 தேசிய கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையும், பொறுப்பேற்றலும் வேண்டும்.

அரசியல் கட்சிகள் நன்கொடை, பங்களிப்பு என்ற பெயரில், பெரும் அளவு நிதி பெறுகின்றன. ஆனால் தங்களுக்கு கிடைக்கிற நிதிக்கு ஆதாரம் எதையும் அவை கூறுவதில்லை. தங்கள் வருவாய், செலவினம் குறித்து அனைத்து தேசிய, பிராந்திய கட்சிகள் கணக்கு தருவதை கட்டாயம் ஆக்க வேண்டும்.
ரூ.20 ஆயிரத்துக்கு குறைவான நன்கொடை என்றாலும் அதற்கும் கணக்கு காட்ட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் குமார் மிஷ்ரா, அமித்தவா ராய் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அரசியல் கட்சிகள், பொது அதிகார அமைப்புகள்தான். எனவே அவற்றை தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின்கீழ் கொண்டு வரவேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் பதில் அளிப்பதற்கு மத்திய அரசு, தேர்தல் கமிஷன், பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications