பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மத்திய அரசு கால அவகாசம் தர வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: உண்மையான, ஏற்றுக் கொள்ளத்தக்க காரணங்களுக்காக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள
கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசமும் கொடுத்தது.

அதன்படி அனைத்து வங்கிகள், தபால் நிலையங்களில் பழைய நோட்டை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய ரூ.2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்தது. இதனால் மக்கள் தங்கள் அன்றாட பணிகளை விட்டு விட்டு மணிக்கணக்கில் வங்கி வாசல்களே கதி என்று காத்திருந்தனர். அதுவும் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்பதால் வங்கி திறக்கும் நேரத்துக்கு மிகவும் முன்னதாகவே மக்கள் காத்திருந்தனர்.
வெளிநாடுகளுக்கு சென்ற , வெளிநாடு வாழ் இந்தியர்களும் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்தது. இந்த நிலையில் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கால அவகாசத்தை கூடுதலாக நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதுதவிர்த்து டெல்லி, கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து வழங்க வேண்டும் என்று 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது இன்று தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு நீதிபதிகள் விசாரணை நடத்தியது. அப்போது அவர்கள், உண்மையான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான காரணங்களால் பழைய நோட்டுகளை மாற்ற இயலாதவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வு நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications