விதிமீறல் வழக்கு.. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பால் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு நிம்மதி
டெல்லி: மத்திய சட்ட அமைச்சர் சதானந்தகவுடா விதிமுறை மீறி பெங்களூரில் வணிக வளாகம் கட்டியதாக தொடரப்பட்ட வழக்கி்ல் அவரிடமிருந்து சொத்தை பறிமுதல் செய்ய கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
முக்கிய பிரமுகர்களுக்கு ஜி கேட்டகிரியின்கீழ் வீட்டு மனை ஒதுக்கப்படும் வழக்கம் கர்நாடகாவில் உள்ளது. அதேபோல, கர்நாடக சட்டசபையில் 2002ல் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த சதானந்தகவுடாவுக்கு அவரது வேண்டுகோளை ஏற்று, 2006ம் ஆண்டு பெங்களூரில், வீட்டு மனை ஒதுக்கப்பட்டது.

ஆனால், வீட்டுமனையாக கொடுக்கப்பட்ட அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டியதாக கவுடா மீது புகார் எழுந்தது. இதில் பக்கத்து வீட்டுமனையின் உரிமையாளரான பாஜக எம்.எல்.ஏ ஜீவராஜும் உடந்தை என கூறப்பட்டது. கர்நாடக ஹைகோர்ட்டில் நாகலட்சுமி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்து, கவுடாவின் வீட்டுமனையை திரும்ப பெற கேட்டுக்கொண்டார்.
இதையேற்ற ஹைகோர்ட் வீட்டுமனையை திரும்ப கொடுக்க உத்தரவிட்டது. கவுடா தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்து. நீதிபதி மதன் பி.லோகூர் தலைமையிலான பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இவ்வழக்கில் மேல்முறையீட்டுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இதனால் பெரும் சிக்கலில் இருந்து சட்ட அமைச்சர் சதானந்தகவுடாவுக்கு ரிலீஃப் கிடைத்துள்து.












Click it and Unblock the Notifications