ரூ.1 கோடி போன் பில் பெண்டிங்குக்காக தயாநிதியை கைது செய்தாக வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
டெல்லி: ரூ. 1 கோடி போன் பில் பெண்டிங்குக்காக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்துதான் ஆக வேண்டுமா என்று உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
சட்டவிரோதமான தமது வீட்டில் தொலைபேசி இணைப்பகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஏற்படுத்தியிருந்தார்; இதன் மூலம் தமது சகோதரர் கலாநிதியின் சன் டிவி குழுமம் ஆதாயம் அடைந்தது என்பது சி.பி.ஐ. குற்றச்சாட்டு.
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் ரூ.1 கோடி அளவுக்கு தயாநிதி மாறனால் இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.
மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கு தயாநிதி மாறன் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்தது. இதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் தயாநிதி மாறனுக்கு அளித்த 6 வார இடைக்கால ஜாமீனை ரத்து செய்தது. அத்துடன் 3 நாட்களுக்குள் சி.பி.ஐ. முன் தயாநிதி சரணடையவும் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதி தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது.
அப்போது தயாநிதி மாறன் தரப்பில், சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையின் படி ரூ1 கோடியே 20 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. அந்தத் தொகையை நாங்கள் செலுத்த தயாராக இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி தாக்கூர் எழுப்பிய கேள்விகள்:
- ரூ.1 கோடி தொலைபேசி கட்டணத்தை பாக்கி வைத்த காரணத்தாக ஒருவரை கைது செய்ய வேண்டுமா?
- 2013ஆம் ஆண்டு இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். போடப்பட்டு இதுவரை யாரும் ஏன் கைது செய்யப்படவில்லை?
- கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
- உத்தரப்பிரதேசத்தில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் ரூ800 கோடி பொதுமக்கள் பணத்தை ஊழல் செய்திருக்கிறார்கள்.. அதில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
- ஆனால் ரூ.1 கோடி போன் பில் பெண்டிங்குக்காக ஒருவரை கைது செய்ய துடிக்கிறீர்களே?
- சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பு அமைத்திருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்துங்கள்.. பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் விசாரணை நடத்துங்கள்.. தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி கண்டறியுங்கள்.. எதற்காக தயாநிதி மாறனை கைது செய்ய வேண்டும்?
- தயாநிதியை கைது செய்வது சி.பி.ஐ.க்கு கவுரவ பிரச்சனையா?
- ஒரு வழக்கின் விசாரணையில் முன்னேற்றத்தை உருவாக்க கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர..அரசியல் பழிவாங்கல் விளையாட்டுகளுக்கெல்லாம் கைது நடவடிக்கை கூடாது...
- தயாநிதியை கைது செய்ய வேண்டும் என்பதில் அரசியல் பழிவாங்கல் இருக்கிறதா?
- தயாநிதி மாறனை கைது செய்தாக வேண்டும் என்பதற்கு சி.பி.ஐ. தெரிவிக்கும் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.
- இது தொடர்பாக 2 வாரத்துக்குள் சி.பி.ஐ. பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.
- இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 14-ந் தேதி நடைபெறும். அதுவரை தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தாக்கூர் கேள்வி எழுப்பி உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications