புதிய நீதிபதிகள் நியமனம்:பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப நேரிடும்-தலைமை நீதிபதி வார்னிங்
நீதிபதிகள் நியமனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
டெல்லி: புதிய நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதித்து வருவது குறித்து தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடியின் அலுவலக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப நேரிடும் என்றும் தலைமை நீதிபதி தாக்கூர் எச்சரித்துள்ளார்.
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலிஜியம் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் மத்திய பாஜக அரசு இதை மாற்றி அமைத்தது.

மத்திய அரசின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதன் பின்னர் புதிய நீதிபதிகள் நியமன பட்டியலை 'கொலிஜியம்' மத்திய அரசிடம் பரிந்துரைத்தது. இதுவரை இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை.
இது தொடர்பாக பலமுறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பி 9 மாதங்களாகியும் ஏன் ஒப்புதல் தரவில்லை என்பது குறித்து விளக்கம் தர வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் ரோத்தகிக்கு தலைமை நீதிபதி தாக்கூர் உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் நாட்டின் பல உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாததால் நீதிமன்ற அறைகள் மூடப்பட்டிருக்கின்றன. நாங்கள் தொடர்ந்தும் பொறுமை காக்க முடியாது; இது தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பவும் நேரிடும் எனவும் தலைமை நீதிபதி தாக்கூர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications