2001-ல் 4 தொகுதிகளில் போட்டியிட ஜெ. மனு தாக்கல் செய்த வழக்கு: செப்.8-ல் இறுதி விசாரணை!!
டெல்லி: தேர்தல் விதிகளை மீறி 4 தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 8-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

தேர்தல் விதிமுறைகளின் படி ஒருவர் இரு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது. அதனால் 4 தொகுதிகளில் ஒரே நேரத்தில் போட்டியிட மனுத் தாக்கல் செய்த ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்.பி குப்புசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் இடையே குப்புசாமி திடீரென மரணமடைந்தார். அதனால் ஏ.கே.எஸ்.விஜயன் மனுதாரராக இருந்து வழக்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் அறிவித்துள்ளது.
இந்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என விஜயன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார். மேலும் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக 2 முறை முதல்வர்பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை இழந்தவர் ஜெயலலிதா; அவர் மீதான முந்தைய வழக்குகளைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications