கூடுதல் சாதம் கேட்டதால் 1-ம் வகுப்பு குழந்தை மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய பள்ளி சமையலர்
மத்திய பிரதேசத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சோறு பரிமாறப்பட்டபோது இரண்டாவது முறையாக கொஞ்சம் சோறு கேட்ட குழந்தை மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றினார் பள்ளி சமையலர்.
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு கூடத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சோறு பரிமாறப்பட்டபோது 2-ஆவது முறையாக சோறு கேட்ட ஒன்றாம் வகுப்பு சிறுவன் மீது ஆத்திரமடைந்த சமையலர் கொதிக்கும் சாம்பாரை ஊற்றியதால் அவனது முகம், தாடை, மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் டின்டோரியில் தொடக்க நிலை பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு பள்ளியிலேயே வழங்கப்படுகிறது. அங்கு பள்ளி சமையலராக இருப்பவர் நேம்வதி பாய்.

கடந்த 23-ஆம் தேதி பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது ஒன்றாம் வகுப்பு மாணவர் பிரின்ஸ் மெஹ்ரா, 2-ஆவது முறையாக கொஞ்சம் சோறு கேட்டார்.
இதனால் நேம்வதி பாய் ஆத்திரமடைந்தார். உடனே சூடாக இருந்த சாம்பாரை எடுத்து பிரின்ஸின் மீது ஊற்றினார். இதில் பிரின்ஸ் அலறினார். அவரது முகம், தாடை, மார்பு மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த சிறுவன் டின்டோரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸாருக்கு கடந்த 24-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications