மரண தண்டனை சட்டம் போட்டும் பலனில்லை.. ம.பி.யில் 15 வயது பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்
போபால்: 15 வயது பள்ளி மாணவி இருவரால் பலாத்காரம் செய்யப்பட்டு பிறகு, உயிரோடு தீ வைத்து கொளுத்திய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்திலுள்ளது தேவல் கிராமம். இப்பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிதான், பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
அதே ஊரை சேர்ந்த ராகவேந்திரா சென் மற்றும் சுபம் யாதவ் ஆகிய இருவரும்தான், இந்த மா பாதக செயலை செய்துள்ளனர்.

கூட்டு பலாத்காரம்
மாணவி வீட்டில் தனியாக இருந்த நேரமாக பார்த்து வீட்டுக்குள் புகுந்த இருவரும், அவரை மாறி, மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பிறகு சம்பவம் குறித்து வெளியே சொல்லிவிடுவார் என அஞ்சிய குற்றவாளிகள் இருவரும், அந்த மாணவி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

தீ வைத்தனர்
மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் ஓடி வந்து நெருப்பை அணைத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் 80 சதவீதம் அளவுக்கு அந்த சிறுமிக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலம்
மாணவியின் வாக்குமூலம் அடிப்படையில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவன் தலைமறைவாகியுள்ளான்.

தூக்கு தண்டனை
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சமீபத்தில்தான் மத்திய பிரதேசத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக சட்டம் காத்திருக்கிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications