டெல்லியை போலவே பலாத்காரத்திற்கு எதிராக பொங்கும் பெங்களூர்: மாணவிகளும் வீதிக்கு இறங்கினர்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில், பள்ளி வளாகத்தில் 6வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் தீவிரமாகியுள்ளது. டெல்லியில் நிர்பயா பலாத்கார சம்பவத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பை போல பெங்களூரிலும் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே காலவரையின்றி பள்ளி மூடப்பட்டுள்ளது குறித்து, நிர்வாகத்துடன் மாணவ, மாணவிகளின் பெற்றோர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

காமகொடூர ஆசிரியர்
பெங்களூர் மாரத்தஹள்ளியிலுள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் 6 வயதான 1ம் வகுப்பு மாணவி, ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் முஸ்தபா என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரது லேப்டாப்பில் சிறுமிகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு முன்பு இதே ஆசிரியர், ஒயிட்பீல்டிலுள்ள மற்றொரு பள்ளியிலும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

பள்ளி மூடல்
தகுந்த விசாரணையின்றி ஆசிரியர்களை நியமித்த பள்ளிக்கு எதிராக பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இம்மாதம் 17ம்தேதி முதலே பள்ளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் பிற மாணவ, மாணவிகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்க பள்ளி நிர்வாகத்துடன் பெற்றோர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இதன்பிறகே, பள்ளி மீண்டும் திறக்கப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.

கமிஷனர் பணியிடமாற்றம்
இதனிடையே பெங்களூரில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இதையடுத்து நேற்று இரவு அதிரடியாக பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு எம்.என்.ரெட்டி புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு கமிஷனர் கமல்பந்த் பணியிடமாற்றம் செய்யப்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரிவில் அனுபவம் மிக்கவரான அலோக்குமார் நியமிக்கப்பட்டார். புதிய கமிஷனர் ரெட்டி, சம்பவம் நடந்த பள்ளிக்கு இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பெற்றோர்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர்.

கல்லூரி மாணவிகள் போராட்டம்
இதனிடையே பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி இப்பிரச்சினையை தீவிரமாக கையிலெடுத்துள்ளது. பெங்களூர் நகரிலுள்ள பெரும்பாலான கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். பெங்களூர் ஜெயநகர் பகுதியிலுள்ள கல்லூரி மாணாக்கர்கள், எலிபென்ட்ராக் சாலையில் பெரும் ஊர்வலம் நடத்தி, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். மங்களூரில் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்-அப் போராட்டம்
பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. பெங்களூர் நகரிலுள்ள பிரீடம்பார்க் பகுதியில் பாஜக பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்துகிறது. இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். பெங்களூர் நகரில் வாட்ஸ் அப் மூலமாகவும் இந்த பலாத்காரம், போராட்டம் குறித்த செய்திகள் தீவிரமாக பரவி வருகின்றன. பலரும் வாட்ஸ் அப் புரொபைல் போட்டோக்களில் கருப்பு சின்னத்தை மாற்றி வைத்துள்ளனர்.

டெல்லியை போல
டெல்லியில் கல்லூரி மாணவி (நிர்பயா) பலாத்காரம் செய்யப்பட்டபோது நகரமே கொதித்தெழுந்தது. பெரும் போராட்டங்கள் வெடித்ததால் அந்த பிரச்சினை பூதாகரமானது. தற்போது பெங்களூரிலும் அதைப்போன்ற ஒரு போராட்டம் தொடங்கியுள்ளதாகவே போலீசார் பார்க்கிறார்கள். மாணவ, மாணவிகளின் பெற்றோர் போராட்டங்கள், கல்லூரி மாணாக்கர் போராட்டங்கள், அரசியல் கட்சி போராட்டங்கள் என பெங்களூர் நகரம் போராட்ட களமாக காட்சியளிக்கிறது.

எடியூரப்பா கைது
இதனிடையே பிரீடம் பார்க் பகுதியில் இருந்து ஊர்வலமாக தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்ற பாஜகவின் முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். முன் அனுமதியின்றி தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலம் சென்றதற்காக கர்நாடக முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications