பள்ளியில் எது நடந்தாலும் நிர்வாகத்துக்கு பொறுப்பில்லையாம்! கையெழுத்து போட பெற்றோருக்கு நெருக்கடி
பெங்களூர்: பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு என்ன ஆனாலும் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பு கிடையாது என்று பெற்றோரிடம் கையெழுத்து போடுமாறு பெங்களூரில் பல பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளன. பள்ளிகளில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதை கருத்தில்கொண்டு, அதில் இருந்து தப்பிக்க இதுபோன்ற நெருக்கடி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பள்ளி வளாகத்தில் பலாத்காரம்
பெங்களூர் மாரத்தஹள்ளி பகுதியிலுள்ள விப்ஜியார் (vibgyor) பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமி பள்ளி வளாகத்திற்குள் அதன் ஊழியர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பள்ளியில் சிறுமி கடத்தல்
ஒரு வாரத்திற்கு முன்பாக பெங்களூரின் ஆஸ்டின் டவுன் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் படித்த சிறுமியை கடத்தி சென்று கொலை செய்த தாய் மாமனும், அத்தையும் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களால் பள்ளியின் மீதான நம்பிக்கை பெற்றோருக்கு குறைந்துவருகிறது. போலீஸ் விசாரணைக்கு பள்ளி நிர்வாகங்கள் பதில் கூற வேண்டியுள்ளது.

எங்களுக்கெல்லாம் சம்மந்தம் இல்லைப்பா..
இந்த சூழ்நிலையை தவிர்ப்பதற்காக பெங்களூரின் பல பள்ளிகள் பெற்றோர்களை மிரட்ட தொடங்கியுள்ளன. அதாவது, பள்ளியில் வைத்து குழந்தைக்கு எது நடந்தாலும் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பாகாது என்று குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் கையெழுத்திட்டு தர வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் மிரட்ட தொடங்கியுள்ளன.

சுற்றுலா கூட்டிச்சென்றாலும் அப்படித்தான்..
பள்ளி வளாகத்தில் மட்டுமின்றி, சுற்றுலா செல்லும் இடங்கள், கேம்ப் போடும் பகுதிகளிலும், குழந்தைக்கு என்ன ஆனாலும், பள்ளி நிர்வாகம் பொறுப்பு கிடையாது என்று சம்மதித்து கையெழுத்திட பெற்றோர் வற்புறுத்தப்படுகிறார்கள்.

பெற்றோர்களின் நிர்பந்தம்
கையெழுத்து போட மறுத்தால் குழந்தைக்கு ஆசிரியர்கள் தொல்லை தருவார்களோ, குழந்தையை பள்ளியில் இருந்து நீக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தால் சில பெற்றோர்கள் கையெழுத்து போட்டு கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications