ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு... அரைநாள் மட்டும் வகுப்புகள் நடத்த ஜெகன் உத்தரவு..!
அமராவதி: ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் ஜூன் மாதம் முதல் படிப்படியாக மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், கல்வி நிலையங்களை திறப்பது பற்றி மாநிலங்களில் நிலவும் சூழலுக்கேற்ப அந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து பஞ்சாப்பில் பள்ளிகள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆந்திராவில் நவம்வர் 2-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. வருகைப்பதிவேட்டில் ஒற்றை இலக்க எண்களில் இருப்போருக்கு ஒரு நாளும் இரட்டை இலக்க எண்களில் இருப்போருக்கு மற்றொரு நாளும் வகுப்புகள் நடத்த ஜெகன் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வகுப்புகள் காலை தொடங்கி மதியம் வரை மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் சிறப்பு வகுப்பு உள்ளிட்ட காரணங்களை கூறி மாணவர்களை நாள் முழுவதும் பள்ளிகளில் வைத்திருக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார். இந்த நடைமுறையில் காலத்தின் சூழலுக்கேற்ப மாற்றம் கொண்டுவரப்படும் என தெரிவித்திருக்கிறார்.
இதேபோல் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே திறக்க வேண்டும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications