சசிதரூர் வேட்பு மனு பரிசீலனை ஒத்திவைப்பு
திருவனந்தபுரம்: சசிதரூரின் வேட்புமனு பரிசீலனையை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தரூருக்கு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் லோக்சபா தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. மாநிலத்திலேயே பெரிய தொகுதியான திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி.யும், மத்திய அமைச்சருமான சசிதரூர் போட்டியிடுகிறார்.
மனைவி சுனந்தாவின் மரணம் உள்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சசிதரூருக்கு கடும் எதிர்ப்பை மீறி மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் மேலிடம் வழங்கியது. அவரும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

திருவனந்தபுரம் தொகுதியில் கம்யூனிஸ்டு சார்பில் பெனட் ஆபிரகாமும், பா.ஜ.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜகோபாலும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் திங்கட்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. அப்போது சசிதரூர் தனது வேட்புமனுவில் மனைவி சுனந்தாவின் சொத்து விபரத்தை குறிப்பிடவில்லை என்றும் எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரினார்கள்.
இதுபற்றி தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பிஜூபிரபாகரிடம் அவர்கள் புகார் மனு கொடுத்தனர். இதனால் சசிதரூரின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது. சசிதரூர் நேரில் ஆஜராகி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.
இதே போல கம்யூனிஸ்டு வேட்பாளர் பெனட்ஆபிரகாம் தன் மீது வழக்கு இருப்பது பற்றி குறிப்பிடாததால் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. மேலும் ஆற்றிங்கல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிந்துகிருஷ்ணாவும் தன் மீது உள்ள வழக்குப்பற்றி குறிப்பிடாததற்கும் கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து அந்த வேட்பாளர்களையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications