நாடாளுமன்றம் மீண்டும் கூடியது! வழக்கம் போல எதிர்க்கட்சிகள் அமளி- ராஜ்யசபா ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கியது, லோக்சபாவில் வழக்கம் போல எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று மீண்டும் தொடங்கியது. லோக்சபாவில் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். ராஜ்யசபாவில் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி கடந்த மாதம் 9-ந் தேதி முடிவடைந்தது. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநில சட்டசபை தேர்தல்களால் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது தேர்தல்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கியது. தமிழக எம்.பி.க்கள் மீனவர் படுகொலை, நெடுவாசல் போராட்டம், நீட் விவகாரம் குறித்து இரு சபைகளிலும் எழுப்ப உள்ளனர்.
ராஜ்யசபாவில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விவாதிக்க ஏற்கனவே ஓபிஎஸ் அணி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளனர். அதேபோல் தமிழக மீனவர் படுகொலை தொடர்பாக ராஜ்யசபாவில் சிறப்பு விவாதம் நடத்த திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தி இருக்கிறார். அதிமுக எம்.பி.க்களும் மீனவர் பிரச்சனைக்காக தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. அப்போது லோக்சபாவில் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.
ராஜ்யசபாவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications