தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கிலானிக்கு ஜாமீன் கொடுத்தது டெல்லி கோர்ட்!
டெல்லி: நாட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல்குரு தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவின் நினைவு நாள் நிகழ்வு கடந்த பிப்ரவரி 10-ந் தேதி டெல்லி பிரஸ் கிளப்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அப்சல் குருவுக்கு ஆதரவாகவும் நாட்டுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக கிலானி தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதாகி பிறகு குற்றவாளி அல்ல என்று விடுவிக்கப்பட்டவர் பேராசிரியர் கிலானி. இந்நிலையில் கிலானிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
அண்மையில் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கன்னையாகுமார், உமர் காலித், பட்டாச்சார்யா ஆகியோரும் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications