"சுயமரியாதை" தான் முக்கியம்.. பாஜகவில் எழுந்த குரல்.. குஜராத் எம்எல்ஏ திடீர் ராஜினாமா! என்ன நடந்தது
காந்தி நகர்: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், குஜராத்தில் உள்ள பாஜக எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ராஜினாமா: இதற்கிடையே குஜராத் பாஜக எம்எல்ஏ கேதன் இனாம்தார் திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதையை விட வேறு எதுவும் முக்கியம் இல்லை என்று சொன்ன அவர், தனது உள்ளுணர்வைக் கேட்டே ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்துள்ளார்
குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள சவ்லி தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக இருந்த இவர், தனது ராஜினாமா கடிதத்தைச் சட்டப் பேரவைத் தலைவர் சங்கர் சவுத்ரியிடம் அளித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்திலேயே அவர் தனது உள்ளுணர்வைக் கேட்டே ராஜினாமா செய்ததாகத் தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகரிடம் சமர்ப்பித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேதன் இனாம்தார் மேலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
எதுவும் நடக்கவில்லை: அவர் கூறுகையில், "நான் சிறுவயது முதலே பாஜகவில் தான் இருக்கிறேன். ஆனால், இப்போதும் என்னைக் கட்சி பெரிய பொருட்டாக நினைக்கவில்லை என்பதை உணர்ந்தேன். இது குறித்து தலைமைக்குத் தெரிவித்துள்ளேன். கடந்த 11 ஆண்டுகளாக நான் சாவ்லி தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறேன். ஆனால், அதைத் தாண்டி எதுவும் நடக்கவில்லை. இத்தனை காலம் நான் பாஜகவில் இருந்த போதிலும் என்னைக் கட்சி கண்டுகொள்ளவில்லை.
நான் 2020ஆம் ஆண்டிலே சொன்னதை போலவே சுயமரியாதையை விட பெரியது எதுவுமே இல்லை. இது கேதன் இனாம்தாரின் குரல் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சி தொண்டர்களின் குரல். புதிதாகக் கட்சிக்கு வருவோரை இணைத்துக் கொள்வதில் தவறு இல்லை. ஆனால், அவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு. புதிதாகக் கட்சியில் சேர்பவர்களைப் புறக்கணிப்பது சரியான நடைமுறை இல்லை. அப்போது நான் என்ன சொன்னேனோ அதை நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன்.
கட்சியில் தான் இருப்பேன்: நான் எம்எல்ஏவாக ராஜினாமா செய்தாலும் தொடர்ந்து பாஜகவில் தான் இருப்பேன். எங்கள் லோக்சபா தேர்தல் வேட்பாளர் ரஞ்சன் பட் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை உறுதி செய்வேன். அதற்காக நான் இரவும் பகலும் நான் நிச்சயம் உழைப்பேன். பிறகு ஏன் ராஜினாமா செய்தீர்கள் எனக் கேட்கலாம்.. எனது உள்ளுணர்வு ராஜினாமா செய்யச் சொன்னது. இதன் காரணமாகவே நான் ராஜினாமா செய்தேன்" என்றார்.
இனாம்தார் கடந்த 2020ஆம் ஆண்டிலும் இதேபோலத் தான் ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தார். மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தன்னையும் தனது தொகுதியையும் புறக்கணிப்பதாகவும் கூறி அவர் ராஜினாமா செய்தார். மேலும், தன்னை போலவே பாஜக எம்எல்ஏக்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், அப்போது சபாநாயகர் அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இவர்: இனாம்தார் முதலில் 2012 சட்டமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பாஜகவில் இணைந்து 2017 மற்றும் 2022 தேர்தல்களில் இரண்டு முறை வெற்றி பெற்றார். குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 இடங்களில் 156 சீட்கள் பாஜக வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 26 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே ஒரே கட்டமாக வரும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications