முதுகில் குத்தியபோது பால்தாக்கரே நினைவுக்கு வரவில்லையா மோடி அவர்களே..! சிவசேனா கடும் காட்டம்
மும்பை: எங்கள் முதுகில் குத்தியபோது, பால்தாக்கரே நினைவுக்கு வரவில்லையோ என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக-சிவசேனா இடையேயான 25 ஆண்டுகால உறவு, மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின் சீட்டு பங்கீட்டு பிரச்சினையால் முறிந்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, சிவசேனா குறித்து எந்த ஒரு இடத்திலும் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை மட்டுமே விமர்சனம் செய்தார்.

பால்தாக்ரேவை விமர்சனம் செய்யவில்லை
மறைந்த, சிவசேனா தலைவர் பால்தாக்கரே மீது மரியாதை வைத்துள்ளதால், சிவசேனா குறித்து விமர்சனம் செய்யப்போவதில்லை என்று மோடி தெரிவித்தார். இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வின் எடிட்டோரியல் பக்கத்தில், மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது அந்த கட்சி.

முதுகில் குத்தினீர்களே
"பால்தாக்கரே மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதால், சிவசேனாவை விமர்சனம் செய்ய மாட்டேன் என்று மோடி கூறியுள்ளார். நாங்களும் பிரதமரை மதிக்கிறோம். ஆனால், தொகுதி பங்கீட்டின்போது எங்கள் முதுகில் பாஜக குத்தியபோது, தாக்கரே மீது வைத்திருந்த மரியாதை எங்கே போயிருந்தது? கூட்டணியை முறிக்கும் முன்பாக பால்தாக்கரே குறித்த நினைவு பாஜகவுக்கு வரவில்லையா?

குஜராத்துக்கு கொண்டு போகலாமா?
காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் மகாராஷ்டிராவை கொள்ளையடித்ததாக மோடி பேசியுள்ளார். அது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனால் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல், மகாராஷ்டிரா வந்து, தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க இங்குள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்புவிடுத்தாரே, அதுவும் மராட்டியத்தை கொள்ளையடிப்பது போலத்தான்." இவ்வாறு அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடாது சிவசேனா
எப்படியோ, மகாராஷ்டிராவில் பாஜக பணிந்து போய், ஓட்டு வேட்டையாடலாம் என்று நினைத்தாலும்கூட, சிவசேனா விடாது போல இருக்கிறது.












Click it and Unblock the Notifications