பஞ்சாப்: அகாலி தளத்தில் சடுகுடு ஆடுதா பாஜக? பாதல் பதவி விலக சீனியர் 'தலை'கள் போர்க்கொடி!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளத்தில் பெரும் கலகம் வெடித்துள்ளது. அகாலி தளத்தின் தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆனால் பாஜகவின் தூண்டுதலால் அகாலி தளத்தில் கலகத்தை ஏற்படுத்துவதாக பாதல் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி இருப்பதால் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் 7 இடங்களில் வென்றது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு 3 இடங்கள்தான் கிடைத்தன. அகாலி தளம் 1 இடத்திலும் சுயேட்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றனர். வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு 26.30%; ஆம் ஆத்மி கட்சிக்கு 26.02% ; பாஜகவுக்கு 18.56%;அகாலிதளம் கட்சிக்கு 13.42% உள்ளன.

பஞ்சாப் மாநில சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் தொடர்ந்து அகாலி தளம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. பஞ்சாப் அரசியல் களமானது காங்கிரஸ் vs ஆம் ஆத்மி என்கிற நிலைமையாக உருமாறிவிட்டது. இம்மாநிலத்தில் அகாலி தளம் , பாஜகவுக்கு வாக்கு வங்கி கணிசமாக இருந்தாலும் இடங்களைக் கைப்பற்ற முடியாத நிலைமைதான் உள்ளன.
இந்த நிலையில் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா செய்ய வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மதத்தையும் அரசியலையும் சமன் செய்யக் கூடியவரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பாதல் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது அதிருப்தியாளர்களின் கோரிக்கை. மேலும் அகாலி தளத்தைக் காப்பாற்ற ஜூலை 1-ந் தேதி முதல் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்தப் போவதாகவும் அதிருப்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் பாதல் ஆதரவாளர்களோ இது பாஜகவின் அப்பட்டமான சதி; அகாலி தளத்தை உடைத்து அகாலி தள வாக்குகளை கபளீகரம் செய்து பாஜக பஞ்சாப்பில் காலூன்ற முயற்சிக்கிறது. இந்த சதியின் ஒரு பகுதிதான் பாதலுக்கு எதிரான இந்த கலகக் குரல்; ஆகையால் பாதல் ஒரு போதும் ராஜினாமா செய்ய அனுமதிக்கவே மாட்டோம் என்கின்றனர். இதனால் பஞ்சாப் மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications