விசாகப்பட்டினத்தில் தலையில் குண்டு பாய்ந்து தமிழக இளம் போலீஸ் அதிகாரி மர்மசாவு
விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினம் பாடேருவில் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் போலீஸ் அதிகாரி கே. சசிகுமார் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமார் 2012-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி. இவர் ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டம் பாடேருவில் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் பாடேருவில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து விசாரித்த போலீஸ் அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து இன்று அதிகாலை துப்பாக்கி சூட்டு சப்தம் கேட்டிருக்கிறது. இதையடுத்து பாதுகாவலர்கள் ஓடிச் சென்று பார்த்துள்ளனர்.
அப்போதுதான் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக இருந்தது தெரியவந்தது. சசிகுமாரின் கைத் துப்பாக்கி டேபிள் மேல் இருந்தது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். விசாகப்பட்டினம் எஸ்பி சம்பவ இடத்துக்கு சென்றிருக்கிறார் என்றனர்.
சசிகுமார் திருமணமாகாதவர். இதற்கு முன்னர் கர்நூல் மாவட்டம் அல்லகட்டாவில் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரியில்தான் பாடேருவுக்கு மாற்றப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆந்திரா அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications