சரக்கு வேணாம்.. பசும்பால் குடிங்க! மதுபான கடை முன்பாக பசுக்களை கட்டி.. பாஜக உமா பாரதி நூதன போராட்டம்
இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உமா பாரதி இப்போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளார்.
போபால்: மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி மாநிலத்தில் மது விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுபான கடைகளுக்கு முன்னால் பசு மாடுகளை கட்டி வைத்து அவற்றிற்கு வைக்கோல் கொடுத்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மது விற்பனைக்கு சட்டப்பூர்வமான அனுமதி இருக்கிறது. ஆனால் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மது விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்திலும் மது விலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான உமா பாரதி வலியுறுத்தி வருகிறார்.
இது அம்மாநில பாஜகவுக்கு அடிக்கடி தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு மாநில அரசு நடத்திய மதுவுக்கு எதிரான பிரசாரத்தில் உமா பாரதியை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்க வைத்தார். ஆனாலும் சமாதானம் ஆகாத உமா பாரதி தொடர்ந்து மதுக்கடைகளுக்கு எதிராக தன்னிச்சையான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்னர் ஓர்ச்சா பகுதியில் அமைந்துள்ள அரசு அனுமதியுடன் இயங்கும் மதுபான கடை குறித்து மக்கள் தொடர் புகார்களை எழுப்பினர்.
நூதன முறையில் பிரசாரம்
இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிரடியாக களமிறங்கிய உமா பாரதி, மதுக்கடையின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து மதுக்கடைகளுக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தை அவர் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் நேற்று இதே மதுபான கடையின் முன் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அதனை கடையின் வாசிலில் கட்டி வைத்தார். பின்னர் மாடுகளுக்கு தீவணம் கொடுத்து, மதுவுக்கு பதில் பாலை குடியுங்கள் என்று தனது பிரசாரத்தை நூதன முறையில் கொண்டு சென்றுள்ளார்.
முதலமைச்சர்
இது அம்மாநிலம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. என்னதான் பாஜக ஆட்சியிலிருந்துாலும் இவர் தனியாக இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுவது தன்னுடைய பெயர் பிரபலமாக வேண்டும் என்பதால்தான் என்று உட்கட்சியினரே சிலர் கூறுகின்றனர். அதேபோல இவர் ஏற்கெனவே மாநில முதலமைச்சராக இருந்திருக்கிறார். ஆனால் கர்நாடகாவின் ஹுப்லி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு இவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் பாஜக சிவராஜ் சிங் சவுகானை முதலசைமச்சராக நிறுத்தியது.
மீண்டும்
எனவே மீண்டும் முதலமைச்சராகதான் அவர் இம்மாதிரியான தன்னிச்சையான போராட்டங்களை உமா பாரதி கையில் எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நேற்று நடைபெற்ற நூதன இயக்கத்தில் "மது அருந்தும் பழக்கத்தை அரசு பணமாக்கக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரங்கள் குறித்து மதுபான கடைக்காரர் கூறுகையில், "கடந்த ஆண்டு இதேபோல எங்கள் கடையின் மீது மாட்டு சாணம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது நாங்கள் ஷட்டரை மூடிவிட்டு சென்றுவிட்டோம்.
தேர்தல்
தற்போதும் இதேபோல மற்றொரு சம்பவம் நடந்துள்ளதால் மீண்டும் கடை பாதியிலேயெ அடைக்க வேண்டியதாய் போயிற்று" என்ற கூறியுள்ளார். இந்த ஆண்டு நவம்பரில் மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உமா பாரதி இந்த மதுவிலக்கு போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். மறுபுறம் மாநில அரசு விரைவில் புதிய கலால் கொள்கையை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.