பொய் வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு பாட்டில் பீர், ரூ.2,500 லஞ்சம்: புனே சப்–இன்ஸ்பெக்டர் கைது
புனே: பொய் வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு பாட்டில் பீர், ரூ.2,500 லஞ்சமாக வாங்கிய எரவாடா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே எரவாடா போலீஸ் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ் மோரே (54). சமீபத்தில் இவர் குடித்துவிட்டு போதையில் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்ததாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
பொய் வழக்கால் பயந்து போன அந்த நபரிடம், ரூ. 2,500 பணமும், ஒரு பாட்டில் பீரும் லஞ்சமாக தந்தால் வழக்கை திசை திருப்பி விடுவதாக பேரம் பேசியுள்ளார் பிரகாஷ். இது தொடர்பாக எரவாடா லஞ்ச ஒழிப்பு போலீசிற்கு தகவலளித்தார் குற்றம் சாட்டப்பட்ட அந்நபர்.
இதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.2,500-க்கான ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு பீர் பாட்டிலை சம்பவத்தன்று புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பினார்கள். அந்த நபர் அவற்றை எடுத்துக்கொண்டு எரவாடா போலீஸ் நிலையம் சென்றார். பின்னர், அவர் பிரகாஷ் மோரேயை சந்தித்து லஞ்ச பணத்தையும், பீர் பாட்டிலையும் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷை கைது செய்தனர்.
சமீபத்தில் தான், எரவாடா போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் அனிதா என்பவர் லஞ்சம் வாங்கியக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.