பாஜக எம்.பி. சத்யபால் சிங் வீட்டில் ரெய்டு: விபச்சாரம் நடத்தியவர் கைது, 2 பெண்கள் மீட்பு
மும்பை: மும்பையில் பாஜக எம்.பி சத்யபால் சிங்கிற்கு சொந்தமான வீட்டில் விபச்சாரம் நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் முன்னாள் போலீஸ் கமிஷனரும், பாஜக எம்.பியுமான சத்யபால் சிங்கின் வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அங்கு விபச்சார தொழில் செய்து வந்த வகில் ஷா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த 2 பெண்களை போலீசார் மீட்டனர். சத்யபால் சிங் தனது வீட்டை இந்தியாபுல்ஸ் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட அவர்கள் ஷாவை வீட்டை பார்த்துக் கொள்ள வைத்துள்ளனர். ஆனால் அவரோ அந்த வீட்டில் விபச்சார தொழில் நடத்தி வந்துள்ளார்.
வாடகைக்கு வீடு எடுத்துவிட்டு விதிமுறைகளை மீறியதற்காக இந்தியாபுல்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடரப் போவதாக சிங் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கை குறித்து அறிந்த உடன் இந்தியாபுல்ஸ் நிறுவனம் ஷாவை பணிநீக்கம் செய்துள்ளது.
இது குறித்து இந்தியாபுல்ஸ் நிறுவனம் சார்பில் கூறுகையில்,
வீட்டை பார்த்துக்கொள்ள தான் ஷாவை நியமித்தோம். அவரின் நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திற்கு தெரியாது என்று தெரிவித்துள்ளது.
மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த நேர்மைக்கு பெயர்போன சத்யபால் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்து உத்தர பிரதேச மாநிலம் பாக்பட் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.