வாக்குறுதிகள் நிறைவேறாவிட்டால்... எங்கள் ஓட்டு நோட்டாவுக்கே... பாலியல் தொழிலாளிகள் எச்சரிக்கை
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் சுமார் ஒன்றரை லட்சம் பாலியல் தொழிலாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்னும் ‘நோட்டா'வுக்கு வாக்களிக்கவுள்ளதாக தர்பார் மகிளா சமன்வாயா கமிட்டி அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் வரும் 4ம் தேதி தொடங்கி மே மாதம் 6ம் தேதி வரை ஆறு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய சிகப்பு விளக்குப் பகுதியாக கருதப்படும் மேற்கு வங்கத்திலுள்ள சோனாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் பாலியல் தொழிலாளிகள் இந்தத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லையாம். எனவே, அதனை வெளிப்படுத்தும் விதமாக ‘நோட்டா'வுக்கு வாக்களிக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாக தர்பார் மகிளா சமன்வாயா கமிட்டியின் தலைவர் பாரதி டேய் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நிறைவேறாத வாக்குறுதிகள்...
பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொருமுறை தேர்தல் வரும்போதும் அரசியல் கட்சிகள் மிகப்பெரிய வாக்குறுதிகளை அளிக்கின்றன. ஆனால், ஆட்சிக்குவந்த பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்கள் முன்வருவதில்லை.

பாராமுகம்...
வயதான பாலியல் தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம், சட்டப்புறம்பாக பெண்களை விபச்சாரத்துக்காக கடத்திச் செல்வதை தடுப்பது, விபச்சாரத்தையும் ஒரு தொழிலாக அங்கீகரிப்பது, தொழிலாளர் நலத்துறை சட்டங்களின்கீழ் எங்களையும் இணைப்பது, சிறுமிகளை பலவந்தப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளுவதை தடுப்பது உள்ளிட்ட எங்களது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் பல ஆண்டுகாலமாக பாராமுகமாகவே இருந்து வருகின்றன.

கடிதம்...
எனவே, இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி மத்திய அரசுக்கும், சட்டப்பூர்வமாக பாலியல் தொழிலுக்கு அனுமதி அளித்துள்ள 16 மாநில அரசுகளுக்கும் விரைவில் கடிதம் அனுப்பவுள்ளோம்.

நோட்டா...
இந்த முறையும் எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் இனி நாட்டில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் நோட்டாவை பயன்படுத்த எங்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் சுமார் ஐந்து லட்சம் பெண்கள் இனி நோட்டாவுக்கே வாக்களிப்பார்கள்.

மே.வங்கத் தேர்தலில்...
இதில் முதல்கட்டமாக மேற்கு வங்காளம் மாநில சட்டசபை தேர்தலில் மட்டும் எங்கள் சங்கத்தை சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் பாலியல் தொழிலாளிகள் நோட்டாவுக்கு வாக்களிப்பார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications