அரசு கருவூலத்தில் போதிய பணமில்லையா.. 'அளவு குறைப்பு' அறிவிப்பின் பின்னணி என்ன?
டெல்லி: அரசிடம் போதிய அளவுக்கு பணம் இல்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று அளித்த பேட்டி.
சில நாட்களுக்கு முன்புதான் அரசு வெளியிட்ட அறிவிப்பில், பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்துவிட்டு, புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளும் உச்சவரம்பு ரூ.4000லிருந்து ரூ.4500ஆக உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது. அதாவது பழைய ரூபாய் நோட்டுக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கணக்கில் டெபாசிட் செய்துவிடலாம். ஆனால் அதற்கு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுக்களை பெறுவதில்தான் இந்த உச்சவரம்பு உண்டு.

இந்த நிலையில், சக்திகாந்த் தாஸ் இன்று அளித்த பேட்டியில் மாற்றிக்கொள்ளும் பண அளவு ரூ.2000 மட்டும் என்கிறார். எஞ்சிய பணத்தை ஏடிஎம்கள் வாயிலாகவே எடுக்க முடியும். அவையோ பெரும் கியூவால் மூச்சு திணறிக் கொண்டுள்ளன. பல ஏடிஎம்கள் பணமின்றி மூடப்பட்டுள்ளன.
திடீரென பழைய ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு ஒழித்துவிட்டதால் அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களை அடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசின் கையிருப்பில் போதிய பணம் இல்லாததாலேயே மாற்று மதிப்பை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திரும்ப திரும்ப மக்கள் சென்று பணம் மாற்றிக்கொள்வதை தவிர்க்கவே கையில் மை வைக்கும் நடைமுறையையும் அரசு கொண்டுவந்துள்ளது. இவையெல்லாம், அரசிடம் போதிய அளவு பணம் இல்லாததை காண்பிப்பதாகவே உள்ளன.
ஆனால், சக்திகாந்த் தாஸிடம் நிருபர்கள் இதுகுறித்து இன்று கேட்டபோது, அரசிடம் போதிய பணம் இருக்கிறது என கூறினார். அதேநேரம் வங்கி பணியாளர்களின் பணி சுமையை குறைக்கவே இந்த நடவடிக்கை என்கிறார் அவர். இருப்பினும் மக்கள் வதந்திகளை நம்பி கூட்ட நெரிசலில் சிக்காமல் கூடுமான வரையில் கார்டுகளை பயன்படுத்திக்கொள்வதே இப்போதுள்ள ஒரே மார்க்கம்.












Click it and Unblock the Notifications