பீகார் தேர்தலில் தனித்துப் போட்டி... முலாயம் சிங்கை சமாதானப்படுத்த லாலு பிரசாத், சரத் யாதவ் மும்முரம
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீட்டு பிரச்சனையால் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங்கை சமாதானப்படுத்தும் முயற்சியில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் மும்முரமாக முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
பீகார் சட்டசபையில் உள்ள 243 தொகுதிகளுக்கும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த ஜனதா பெயரிலான அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. அத்துடன் காங்கிரஸ் கட்சியும் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறது.

ஆனால் தொகுதிப் பங்கீட்டில் சமாஜ்வாடிக் கட்சிக்கு 5 ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முலாயம்சிங் யாதவை சமாதானப்படுத்தும் முயற்சியில் 'ஜனதா கூட்டணி'யின் மூத்த தலைவர்களான சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் முலாயம் சிங்கை அவர்கள் இருவரும் நேற்று சந்தித்துப் பேசினர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்தச் சந்திப்பு தொடர்பாக சமாஜவாதிக் கட்சியும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், சரத் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றார்.
முலாயம் சிங்கை சந்தித்ததைத் தொடர்ந்து, பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமாரை சந்தித்துப் பேச சரத் யாதவ் திட்டமிட்டுள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவிலேயே, ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் சமாஜ்வாடி நீடிக்குமா? இல்லையா? என்பது குறித்து தெரிய வரும்.












Click it and Unblock the Notifications