எதிர்பார்க்காத திருப்பம்.. சரத் பவாருக்கு குடியரசுத் தலைவர் பதவி அளிக்க பாஜக பிளானா? பின்னணி என்ன?
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பாஜக எதிர்காலத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் என்று கூறுகிறார்கள்.
Recommended Video
டெல்லி : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பாஜக எதிர்காலத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆசைப்பட்டு பாஜக இந்த திட்டத்தை களமிறக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் முதல்வரை தீர்மானிக்கும் சக்தியாக தேசியவாத காங்கிரஸ் திகழ்கிறது. அங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உடன்படிக்கையை மேற்கொள்ள சிவசேனா தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதற்காக 5 முறைக்கும் மேல் இரண்டு கட்சியின் தலைவர்களும் ஆலோசனை கூட்டங்களை நடத்திவிட்டனர். ஆனால் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் இடையே இன்னும் பெரிதாக உடன்படிக்கை கையெழுத்தாகவில்லை.

ஆனால் என்ன
சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி உருவாகாமல் இருக்க நிறைய காரணம் இருக்கிறது. இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மாறி மாறி தாக்கிக் கொண்டது. மேலும் மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்களிலும் , தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் வென்றுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் எப்படி
தேசியவாத காங்கிரஸ் கட்சியை விட சிவசேனா 4 இடங்கள்தான் அதிகமாக வென்று இருக்கிறது. அதனால் தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவிற்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. ஆனால் சிவசேனா கண்டிப்பாக முதல்வர் பதவி வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது. அதனால் இவர்கள் கூட்டணி இன்னும் கைகூடவில்லை.

பாஜக எப்படி
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க பாஜக முயன்று வருகிறது. நேற்று ராஜ்யசபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தேசியவாத காங்கிரசை புகழ்ந்து பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தனது பேச்சில், இன்று நான் இரண்டு கட்சிகளை பாராட்ட விரும்புகிறேன். தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளை நான் இங்கு பாராட்ட விரும்புகிறேன். அவர்கள் எப்போதும் விதிப்படி சிறப்பாக நடந்து இருக்கிறார்கள்.பாராளுமன்ற விதிகளை பின்பற்றி அவர்கள் சிறப்பாக நடந்து உள்ளனர்.

என்ன ஒழுக்கம்
பாராளுமன்ற ஒழுக்கத்தை, மரபை அவர்கள் மீறியது கிடையாது. எப்போதும் அவர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டது கிடையாது. ஆனாலும் கூட இரண்டு கட்சியினரும் தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்துள்ளனர். அவர்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பாஜக கட்சியும் அவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தகவல்
திடீர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி பாராட்ட காரணம் என்ன, அக்கட்சியுடன் பாஜக கூட்டணிக்கு முயல்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. அக்கட்சிக்கு மோடி அழைப்பு விடுகிறாரா என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்க பாஜக தயாராக இருக்கிறது என்கிறார்கள்.

பதவி
ஆம், அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பவார் போட்டியிட செய்வோம் என்று பாஜக மிகப்பெரிய ஆபரை அக்கட்சிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வருகிறது. அதேபோல் மத்திய அமைச்சரவையிலும் இடம் அளிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.

ஏன் இப்படி
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வேண்டும். சிவசேனாவின் கனவை தகர்க்க வேண்டும் என்று பாஜக இப்படி திட்டமிடுகிறது என்கிறார்கள். ஆனால் இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவலோ, பேட்டியோ வெளியாகவில்லை. இது உண்மையாகும் பட்சத்தில் தேசியவாத காங்கிரஸ் அதை ஏற்றுக்கொள்ளுமா என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications