"அடுத்த ஜனாதிபதியாக அமிதாப் வர வேண்டும்"... சத்ருஹன் சின்ஹாவின் ‘பிக்’ விருப்பம்
பாட்னா: இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வர வேண்டும் என நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருஹன் சின்ஹா விருப்பம் தெரிவித்துள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் சத்ருஹன் சின்ஹாவின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சத்ருஹன் சின்ஹா கலந்து கொண்டு, தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சத்ருஹன் சின்ஹா.

உண்மையில்லை...
அப்போது, பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் சத்ருஹன் சின்ஹா, விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘பாஜகவால் புறக்கணிக்கப்படுகிறேன் எனக் கூறப்படுவது உண்மையல்ல. அரசியலை நான் தொழிலாகப் பார்க்கவில்லை. ஒரு சேவையாகவே நினைக்கிறேன்.

ஓய்வில்லை...
சாமானிய மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தேன். அத்தகைய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். எனவே, அரசியலில் இருந்து ஓய்வுபெறும் பேச்சுக்கே இடமில்லை' எனப் பதிலளித்தார்.

அமிதாப்...
அதனைத் தொடர்ந்து, "நீங்கள் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று அமிதாப் கூறியுள்ளாரே' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, ‘இது அமிதாப்பின் பெருந்தன்மை. அதேவேளையில், பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவியை அமிதாப் அலங்கரித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

பெருமை...
கலாசார ரீதியிலும், சமூகத்துக்காகவும் அமிதாப் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். அவர் குடியரசுத் தலைவரானால் அது பெருமைக்குரிய விஷயமாகும்' என்றார் சத்ருஹன் சின்ஹா.












Click it and Unblock the Notifications