இண்டிகோ விமானத்தில் ஏறிய தாய்.. பைலட்டாக இருந்த மகன் கொடுத்த ‛சர்ப்ரைஸ்'.. பயணிகள் நெகிழ்ச்சி
அமராவதி: இண்டிகோ விமானத்தில் பைலட்டாக (கேப்டன்) இருக்கும் ஜஸ்வந்த் வர்மா தன்னுடன் முதல் முறையாக பயணிக்க வந்த தாய்க்கு கொடுத்த சர்ப்ரைஸை சக பயணிகள் கைத்தட்டி பாராட்டினர். மேலும் தன்னை பைலட்டாக மாற்றுவதற்கு தனது தாய் எதிர்கொண்ட சிரமங்களை கூறிய கேப்டன் ஜஸ்வந்த் வர்மா, அம்மா நீங்க இல்லைனா நான் பைலட்டாக மாற சாத்தியம் இருந்து இருக்காது எனக்கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்வந்த் வர்மா. இவர் இண்டிகோ விமானத்தில் பைலட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜஸ்வந்த் வர்மா கேப்டனாக இருந்த இண்டிகோ விமானத்தில் முதல் முறையாக அவரது தாய் பயணிக்க வந்தார்.

இதுபற்றி அறிந்த ஜஸ்வந்த் வர்மா தனது தாய்க்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதோடு தன்னை பைலட்டாக மாற்றுவதற்கு தாய் பட்ட கஷ்டங்களை கூறி அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தார்.
அதன்படி ஜஸ்வந்த் வர்மா பைலட்டாக இருக்கும் இண்டிகோ விமானத்தில் அவரது தாய் ஏறினார். அப்போது விமானத்தில் வாசலில் வந்து நின்று ஜஸ்வந்த் வர்மா வரவேற்றார். தாயிக்கு பூங்கொத்து கொடுத்து காலில் விழுந்த ஆசீர்வாதம் பெற்றார். அதனை கண்டு அவரது தாய் மகிழ்ச்சியடைந்தார். சகபயணிகள் கைத்தட்டினர். அதன்பிறகு கேப்டன் ஜஸ்வந்த் வர்மா பயணிகள் மத்தியில் பேசினார்.
ஜஸ்வந்த் வர்மா பேசும்போது, ‛‛அனைவருக்கும் மதிய வணக்கம். நான் உங்கள் கேப்டன் ஜஸ்வந்த் பேசுகிறேன். உங்கள் பயணத்திற்கு இண்டிகோவைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இன்று எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். ஏனென்றால் விமானியாகும் எனது கனவையும் ஆதரித்த என் அம்மா இன்று என்னுடன் முதல் முறையாக இந்த விமானத்தில் பயணம் செய்கிறார். தயவு செய்து அவருக்காக பெரிய கைத்தட்டலை வழங்குங்கள்'' என்றார். இதையடுத்து பயணிகள் அனைவரும் கைத்தட்டி ஜஸ்வந்தின் தாயை வரவேற்றனர்.
அதன்பிறகு ஜஸ்வந்த தொடர்ந்து பேசினார். ‛‛நாங்கள் திருப்பதி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். நான் விமானியாக வேண்டும் என்பது எங்களின் கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருந்தது. ஆனால் தூக்கமின்றி உழைத்து, கல்வி கடன் வாங்கி, இஎம்ஐ செலுத்தி என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவர் என் அம்மா தான்.
என் அம்மாவால் தான் நான் இங்கே ஒரு கேப்டனாக நிற்கிறேன். விமானத்தில் பறக்கிறேன். என் கனவை எட்டிபிடித்து வாழ்க்கையை ரசிக்கிறேன். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் என் அம்மாவால் தான் இன்று நான் இப்படி இருக்கிறேன்'' என்றார். மேலும் தனது அம்மாவை பார்த்து, ‛‛இது எல்லாம் உங்களால் தான் சாத்தியமானது. நீங்கள் இல்லாவிட்டால் இந்த பணிக்கு வந்திருக்க மாட்டேன்'' என்றார்.
ஜஸ்வந்தின் இந்த வார்த்தையை கேட்டு அவரது அம்மா, பயணிகள் நெகிழ்ந்து போயினர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும் பலரும் ஜஸ்வந்த் வர்மா மற்றும் அவரது அம்மாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications