கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால்தான் இறந்தார் ஷீனா - மருத்துவ அறிக்கை
மும்பை: இந்திராணி முகர்ஜியின் மகளான ஷீனா போரா கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் தான் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த இந்திராணி தான் பெற்றெடுத்த மகள் ஷீனா போராவை கடந்த 2012 ஆம் ஆண்டு காருக்குள் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்பட்டது. பின்னர் ஷீனா போராவின் உடலை ராய்காட் அருகே உள்ள காட்டில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் 3 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

இச்சம்பவத்தில் இந்திராணி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திடீர் திருப்பமாக பீட்டர் முகர்ஜியும் கைதாகி சி.பி.ஐ காவலில் இருக்கிறார்.
இதனிடையே ராய்காட்டில் மீட்கப்பட்ட ஷீனா போராவின் எலும்புகள் மருத்துவ பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் 5 டாக்டர்களை கொண்ட சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.
அக்குழு முழுமையான ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘ஷீனா போராவின் கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக தான் அவர் உயிரிழந்தார்'' என்பது தெளிவாகி உள்ளது. மேலும், கொலை வழக்கின் முக்கிய ஆதாரத்தை மறைக்கும் பொருட்டு, முழு உடலையும் அழிக்க கொலையாளிகள் முற்பட்டு இருக்கின்றனர் என்றும், எலும்புகளில் பதிவாகி உள்ள காயத்தின் அளவு மிகப்பெரியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications