ஷீனா போரா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மகாராஷ்டிர அரசு உத்தரவு
மும்பை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரபல டிவி சேனல் அதிபர் பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இவரது மகள்தான் ஷீனா போரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். ஆனால் அந்தக் கொலையை திறம்பட மறைத்ததோடு மிகப் பெரிய, சினிமாக்களையும் மிஞ்சும் விதமான கதைகளையும் புனைந்து தனது கணவர் பீட்டர் முகர்ஜி உள்பட உலகத்தையே நம்ப வைத்து பெரிய மோசடி செய்தார் இந்திராணி முகர்ஜி என்பது அம்பலமானது.

இந்தக் கொலையைச் செய்ததாக இந்திராணி முகர்ஜி, அவரது 2வது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொலை வழக்கில் நாளும் ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகி அனைவரையும் அசர வைத்து வந்தது. இந்தக் கொலை வழக்கை மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். முன்னாள் போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கு படு விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் திடீரென ராகேஷ் மரியா மாற்றப்பட்டார். அதன் பின்னர் வழக்கும் பொலிவிழந்து போயுள்ளது.
இந்த நிலையில்தான் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளது மகாராஷ்டிர அரசு. இதுகுறித்து மாநில உள்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் கே.பி.பக்ஷி கூறுகையில், ஷீனா போரா கொலை வழக்கை சிபிஐயிடம் மாற்றி மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications