ஷீனா வழக்கு: பீட்டர் முகர்ஜியிடன் இன்று 2வது நாளாக விசாரித்த போலீஸ்
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் மும்பை போலீசார் பீட்டர் முகர்ஜியிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தியுள்ளனர்.
ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாய் இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திராணியின் தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜியிடம் போலீசார் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
புதன்கிழமை அவரிடம் 12 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் பீட்டரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். காவல் நிலையத்திற்கு வந்த பீ்ட்டர் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்தார். முன்னதாக போலீசார் பீட்டரின் வீட்டில் சோதனை நடத்தி லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையே ஷீனாவின் உடலை எரித்த இடத்தில் கிடைத்த மண்டை ஓடு ஷீனாவுடையதுதானா என்பதை அறிய மரபணு சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் ஷீனா எழுதி வைத்திருந்த டைரி தற்போது கிடைத்துள்ளது.
டைரியில் ஷீனா தனது தந்தை சித்தார்த் தாஸ் பற்றியும், இந்திராணியை திட்டியும் எழுதியுள்ளார். மும்பை போலீசார் சித்தார்த் தாஸிடம் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.