ஷீனாவை கொல்ல பிளான் போட்ட இந்திராணி, கொலை செய்த சஞ்சீவ்: டிரைவர் பரபர வாக்குமூலம்
மும்பை: ஷீனா போராவை கொலை செய்ய அவரது தாய் இந்திராணி முகர்ஜி தான் திட்டமிட்டார், அவரது முன்னாள் கணவர் சஞ்சீ்வ் கொலை செய்தார் என இந்திராணியின் முன்னாள் டிரைவர் ஷியாம் மானவ் மனோகர் ராய் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் இந்தியாவின் முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி தனது முன்னாள் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது மகளை பீட்டரிடம் தன் தங்கை என தெரிவித்துள்ளார். ஷீனா கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாக இந்திராணியின் முன்னாள் டிரைவர் ஷியாம் மானவ் மனோகர் ராயை(43) கர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஷீனாவின் கொலை பற்றிய விவரங்களை தெரிவித்தார். அதன் பிறகே போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திராணியை கைது செய்தனர். ராய் போலீசாரிடம் கூறுகையில்,
இந்திராணி
ஷீனா போராவை கொலை செய்ய இந்திராணி தான் திட்டமிட்டார். ஏப்ரல் 23ம் தேதி ராய்கட் மாவட்டத்தில் உள்ள ககோடே கிராமத்தில் உளவு பார்க்க என்னை அழைத்துச் சென்றார் இந்திராணி.
சஞ்சீவ்
ஏப்ரல் 23ம் தேதி இரவு இந்திராணி தனது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாவுக்கு போன் செய்து நெடுநேரம் பேசினார். அதன் பிறகு அவருக்காக மும்பை வோர்லி பகுதியில் உள்ள ஹோட்டல் ஹில்டாப்பில் அறை ஒன்றை முன்பதிவு செய்தார். கன்னா மறுநாள் மும்பைக்கு வந்து அந்த ஹோட்டலில் தங்கினார்.
காத்திருப்பு
ஏப்ரல் 24ம் தேதி இரவு 7 மணிக்கு இந்திராணியும், சஞ்சீவும் பந்த்ரா பகுதிக்கு காரில் சென்று லின்கிங் ரோட்டில் உள்ள நேஷனல் கல்லூரி அருகே இருக்கும் ஜாக்கி கடை அருகே ஷீனாவுக்காக காத்திருந்தனர்.
கொலை
சஞ்சீ்வ் கன்னா ஷீனாவின் கழுத்தை நெறித்துக் கொன்றார். அவரது உடலை இந்திராணியின் உதவியோடு ஒரு பையில் போட்டு காரின் டிக்கியில் வைத்தார் கன்னா.
கிராமம்
ஷீனாவின் உடலை ககோடே கிராமத்திற்கு காரில் எடுத்துச் சென்றனர். அங்கு அவரின் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். ஏப்ரல் 25ம் தேதி காலை 4 மணிக்கு தான் இந்திராணி, கன்னா மற்றும் நான் வீடு திரும்பினோம். ஷீனாவின் உடல் முழுவதுமாக எரிந்துவிட்ட பிறகே கிளம்பினோம் என்றார் ராய்.