ஷீனாவின் தந்தை சித்தார்த் தாஸிடம் மும்பை போலீஸ் விடிய விடிய விசாரணை
மும்பை: ஷீனா போராவின் தந்தை சித்தார்த் தாஸிடம், மும்பை போலீஸார் நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இந்திராணியின் முதல் கணவர்தான் இந்த சித்தார்த் தாஸ். இவரை விசாரணைக்கு வருமாறு மும்பை, கர் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். முன்னதாக ஒரு போலீஸ் குழு கொல்கத்தா சென்று சித்தார்த் தாஸை பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்து வந்தது.

நேற்று இரவு 8 மணயளவில் கர் காவல் நிலையத்திற்கு சித்தார்த் தாஸ் வந்து சேர்ந்தார். அதன் பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு எதிரே இந்திராணி முகர்ஜியையும் அமர வைத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முழுவதும் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இரவு முழுவதும் நீடித்த விசாரணை இன்று அதிகாலை 3 மணிக்கு முடிவடைந்தது. அவர் அளித்துள்ள வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் என்ன சொன்னார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் ரவி மரியா இன்று செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் இந்திராணியின் 3வது கணவரான பீட்டர் முகர்ஜியிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தான் நடத்தி வரும் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை விசாரணைக்காக போலீஸாரிடம் காட்டினார் பீட்டர் முகர்ஜி. அவருடன் அவரது ஆடிட்டரும் விசாரணையின்போது உடன் இருந்தார்.
பீட்டர், சித்தார்த் தாஸ் ஆகியோர் விசாரிக்கப்பட்டபோது, மற்ற அறைகளில் 2வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்திராணி உள்ளிட்ட 3 பேரின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவதால் இரவு பகலாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications