முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கேரள கவர்னராக நியமனம்
டெல்லி: நிகில் குமாரின் ராஜினாமாவை அடுத்து புதிய கேரள மாநில கவர்னராக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் நியமிக்கப் பட்டுள்ளார்.
கடந்த 1998ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லி முதல்வராக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷீலா தீட்சித். சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலிடம் 22 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் இவர் தோல்வி அடைந்தார்.
அதேபோல், இதர காங்கிரஸ் வேட்பாளர்களும் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு கேரள கவர்னராக பதவியேற்ற டெல்லியின் முன்னாள் போலீஸ் கமிஷனரான நிகில் குமார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து கேரளாவின் புதிய கவர்னராக ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை ஷீலா தீட்சித் சந்தித்தபோது இந்த நியமனம் பற்றிய தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.