ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு டிவிட்டர் மூலம் ஆள் பிடித்த பெங்களூரு எம்.என்.சி ஊழியர்!
பெங்களூரு: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் பிடித்து அனுப்பும் வேலையில் பெங்களூருவிலுள்ள பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் இஸ்லாமிய வாலிபர் ஒருவர் செய்து வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மாற்றுமத நம்பிக்கையாளர்களை கொன்று குவித்து வருகிறது. அவர்கள் கொள்கைகளை செயல்படுத்தும் இஸ்லாமிய நாடுகளை உருவாக்க அந்த அமைப்பு துடித்து வருகிறது. ஈராக்கின் பல பகுதிகளையும் அவ்வமைப்பு கைப்பற்றியுள்ளது.

இந்த அமைப்பில் சேர்ந்து எதிரிகளை கொல்வதற்காக புனித போராளிகள் என்ற பெயரில் பல நாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் ஈராக் செல்கின்றனர். சமீபத்தில் இந்தியாவில் இருந்து சென்ற சில வாலிபர்கள், அந்த வாழ்க்கை பிடிக்காமல் தாயகம் திரும்பினர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே தாங்கள் ஈர்க்கப்பட்டு சென்றதாக கூறினர். இதையடுத்து சமூக வலைத்தளங்களை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. பன்னாட்டு பாதுகாப்பு அமைப்புகளும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில்தான் இங்கிலாந்தை சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி சேனல் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற நபர், @shamiwitness என்ற டிவிட்டர் அக்கவுண்ட் மூலமாக பலரையும் மூளை சலவை செய்து வந்ததாக அந்த சேனல் கூறுகிறது. இந்த மேதி பிஸ்வாஸ், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் பெங்களூரிலுள்ள எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். படித்து, நல்ல வேலையில் உள்ள இந்த இளைஞர், தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக தனது அறிவை பயன்படுத்தியுள்ளார். இவரது டிவிட்டர் அக்கவுண்டில் 17,700 ஃபாலோவர்கள் உள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ள 3ல் 2 பங்கு பேர் இவரது டிவிட்டர் அக்கவுண்ட்டை ஃபாலோ செய்பவர்கள்தான் என்றும் சேனல்4 தெரிவிக்கிறது. காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் ஆயிரக்கணக்கான டிவிட்டுகளை இவர் வெளியிடுவார். அவை அனைத்தும், தீவிரவாத நோக்கம் கொண்டதாகவும், இஸ்லாமியர்களை பாவப்பட்டவர்களாக காண்பிப்பதாகவும் இருக்கும் என்கிறது அந்த சேனல்,. இநத் தகவல் வெளியாகிய நிலையில் டிவிட்டர் அக்கவுண்ட்டை அந்த நபர் மூடியுள்ளார்.
அதே நேரம் இவரது பேஸ்புக் பக்கத்தில் ஜோக்குகளும், சினிமா பிரபலங்கள் குறித்த ரசனைகளும் உள்ளன. சாதாரண மனிதரை போல வெளி உலகிற்கு காண்பித்ததுவந்த, மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் உள்ளுக்குள் மிகப்பெரிய திட்டத்துடன் இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்திய பாதுகாப்பு துறையும் விசாரணையை துவக்கியுள்ளது. இதனிடையே சேனல் 4 அந்த நபரின் முழு பெயர் பின்புலத்தை தெரிவிக்காவிட்டாலும், 'ஒன்இந்தியாவிற்கு' அந்த நபரின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications