குஜராத்தில் கவிழ்த்து விடுவார்களோ? போபால் தொகுதிக்கு தாவும் எல்.கே. அத்வானி!!
டெல்லி: குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டால் தோற்கடிக்க செய்துவிடுவார்களோ என்று கலங்கிப் போய் இம்முறை மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் தொகுதியில் போட்டியிட பாஜக மூத்த தலைவர் அத்வானி விருப்பம் தெரிவித்திருக்கிறாராம்.
லோக்சபா தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வது குறித்து அக்கட்சியின் தேர்தல் குழு டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களின் லோக்சபா தொகுதிகளின் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய காலை கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கலந்து கொள்ளவில்லை. நரேந்திர மோடியைப் பொறுத்தவரையில் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியிலும் குஜராத்தின் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவார் என்றே கூறப்பட்டு வருகிறது.
அத்வானியின் காந்திநகர் தொகுதிக்கு குறி
குஜராத்தில் 16 ஆண்டுகாலம் அத்வானி வசம் இருந்து வரும் காந்திநகர் தொகுதியைத்தான் மோடி குறி வைத்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
தோற்க வைப்பாங்களோ?
அத்வானியும்கூட காந்திநகரை விட்டுக் கொடுப்பதா என்று முதலில் யோசித்தார். பின்னர் மோடியின் எதிர்ப்பை மீறி காந்திநகரில் போட்டியிட்டு ஒருவேளை தோற்கடிக்கச் செய்யப்பட்டால் அசிங்கமாகிவிடுமே என்று கருதி மிகவும் பாதுகாப்பாக தமது ஆதரவாளராக சிவ்ராஜ்சிங் செளகான் ஆளும் மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதிக்கு இடம்பெயர முடிவு செய்துவிட்டார்.
சுஷ்மா ஸ்வாரஜூம் போபாலுக்கு குறி
இதேபோல் மற்றொரு பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வாரஜும் கூட போபால் தொகுதியைத்தான் குறி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மோடியின் வளர்ச்சியில் வெறுப்படைந்து போயிருக்கும் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் அருண் ஜேட்லியும் கூட பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏதாவது ஒரு பாதுகாப்பான தொகுதிக்கு தாவுவார் என்றே தெரிகிறது.
முரளி மனோகர் ஜோஷி எங்கே போட்டி?
இப்போது உத்தப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட்டால் அத்தொகுதி எம்.பியாக மற்றொரு மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி எங்கு போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி இருக்கிறது.
பூகம்பம் உருவாகுமா?
இன்று பாரதிய ஜனதா அறிவிக்கப் போகும் வேட்பாளர் பட்டியல் பாஜகவில் பூகம்பத்தைக் கிளப்பவும் வாய்ப்பிருக்கிறது என்றே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.